
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் காரணமாக கடந்தாண்டு முதல் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இத்தொடரிலும் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.