
இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 399/8 ரன்கள் விளாசியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 104, கிளன் மேக்ஸ்வெல் 106 ரன்கள் விளாசிய நிலையில் சுமாராக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 400 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 21 ஓவரில் 90 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு 40 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்த கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.