
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது.
கடந்த காலங்களை போல் அல்லாமல் ஒட்டுமொத்த தொடரும் இந்தியாவிலே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஆரம்ப கட்டப் பணிகளில் பிசிசிஐ தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பை தொடங்கும் ஒரு ஆண்டுக்கு முன்பே எந்த மைதானங்களில் போட்டியை நடத்தப் போகிறோம் என்று அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும்.
ஆனால் பிசிசிஐ அப்படி ஒரு கடிதத்தை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வருமா என்ற சிக்கலும், மழைக்காலத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் மைதானங்களை தேர்வு செய்வதில் குழப்பம் போன்ற பல சிக்கல்கள் இருந்தது. இந்த நிலையில் பத்து அணிகள் மோதும் 2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.