
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ரஹிம் ஸத்ரான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 18, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 18 என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோராலும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.