
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் அரையிறுதிச்சுற்றுகு நியூசிலாந்து அணி முன்னேற தங்களது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
அதன்படி பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர்.
இதில் பதும் நிஷங்கா 2 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 6 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா ஒரு ரன்னிலும், சரித் அசலங்கா 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் கடந்து, நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக அரைசதமடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.