Advertisement

ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2023 • 19:17 PM
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வந்த ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அவர்களது அதிரடி நீண்ட நேர நீடிக்கவில்லை. இதில் டேவிட் மாலன் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

Trending


அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவும் 30 ரன்கள் எடுத்து ஆட்டாமிழந்தார். அதன்பின் அனுபவ வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மோயீன் அலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதுவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆதில் ரஷிதும் 2 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் அதிரடியாக விளையாடிய மார்க் வுட்டும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளையும், ஏஞ்சலோ மேத்யூஸ், கசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இப்போட்டியிலும் இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர் குசால் பெரேரா 4 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸும் 11 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - சதீரா சமரவிக்ரமா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீராவும் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

இதன்மூலம் இலங்கை அணி 25 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிஷங்கா 7 பவுண்டரி, 2 சிக்சர் என 77 ரன்களையும், சதீரா சமரவிக்ரமா 7 பவுண்டரி ஒரு சிக்சர் என 65 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement