
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக 10 அணிகள் கடந்த வருடம் ஐபிஎல் சீசனில் பங்கேற்றது. ஏற்கனவே இருக்கும் எட்டு அணிகளை தவிர, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் ஆகிய இரு அணிகளும் பங்கேற்றன. பல வருடங்கள் அனுபவமிக்க அணிகளே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறின. ஆனால் புதிதாக இணைந்த இரண்டு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றது. அதில் இன்னும் கூடுதல் சிறப்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, இடம்பெற்ற முதல் சீசனிலேயே முதல் முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.
இதில் இன்னும் கூடுதல் சிறப்பான ஒன்று என்னவென்றால், அதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணியிலிருந்து வெளியேறி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். மேலும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பில் சற்றும் அனுபவம் இல்லாத இவர் எப்படி செயல்படுவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, அபாரமாக செயல்பட்டு கோப்பையை பெற்று தந்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனால் ஆச்சரியப்பட்ட பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவின் மீது கவனம் செலுத்தி அவரை இந்த டி20 உலககோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 போட்டிகளின் கேப்டனாகவும் நியமித்திருக்கிறது. அந்த அளவிற்கு அவர் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவை பற்றி பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலாங்கி, எங்களிடம் ஹர்திக் பாண்டியா இல்லையென்றாலும் இன்னும் சிறப்பான கேப்டன் ஒருவர் அணியில் இருக்கிறார் என மற்றொரு இந்திய வீரரை குறிப்பிட்டு பேசியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.