
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் புதிய முயற்சியாக கருதப்படும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி இன்று மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 6 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மற்றொரு தொடக்க வீரர் இசான் கிசானும் 5 பவுண்டரி 1 சிக்ருடன் 36 (31) ரன்களில் தடுமாறி அவுட்டானார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 13 (9) ரன்களில் நடையை கட்டினாலும் மறுபுறம் 3ஆவது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் வழக்கம் போல களமிறங்கிய முதல் பந்திலிருந்தே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
அவரை கட்டுப்படுத்த கேப்டன் கேன் வில்லியம்சன் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய அவர் நியூசிலாந்து பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் மைதானத்தில் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து ரசிகர்களை மகிழ்வித்து சதமடித்தார். ஆனால் மறுபுறம் அவரை வேடிக்கை பார்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 13 (13) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாக்கிய டிம் சௌதீ ஹாட்ரிக் விக்கெட்களை சாய்த்தார்.