
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை கேப் டவுன் நகரில் நடைபெறும் 2ஆவது போட்டியிலும் வென்று இந்தியாவுக்கு ஒயிட் வாஷ் தோல்வியை பரிசளிக்கும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா காயமடைந்துள்ளதால் டீன் எல்கர் தம்முடைய கடைசி போட்டியில் கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளார். மெதுவாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் வாய்ப்பு பெறாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,331 ரன்களை குவித்து சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார்.
மேலும் 2021/22 இல் 2 – 1 என்ற கணக்கில் கேப்டனாகவும் அவர் இந்தியாவை தோற்கடித்த பெருமைக்குரியவர். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு தமக்கு பெரிய அளவில் கிடைக்காததால் இந்த கடைசி போட்டியை உலகக் கோப்பையாக நினைத்து வென்று 2 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடித்து விடை பெறுவதை விரும்புவதாக டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.