நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
எனது அறிமுக போட்டியில் சதமடிக்க ஆர்வமாக இருந்ததால் நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், 157 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அதன்பிறகு 105 ரன்களில் செளதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்திருந்தார். 2ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 57 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.
சதமடித்தது குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், “முதல் நாளில் இருந்து நடந்த அனைத்திற்கும் மகிழ்ச்சியாக உள்ளேன். நேற்றிரவு நன்கு தூங்குவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் தூங்கவே முடியவில்லை. கவாஸ்கர், அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் மிகவும் ஊக்கம் அளித்தார். சதமடித்தது நிறைவைத் தந்தது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now