
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களைச் சேர்த்திருந்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதமும், அவரைத்தொடர்ந்து 18 ரன்களில் வில் யங்க்கும் என விக்கெட்டுகளை இழந்தன்ர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமாக விளையாடிய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களை எடுத்திருந்த நிலையில் டெவான் கன்வே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், அவருடன் இணைந்து விளையாடிய ரச்சின் ரவீந்திராவும் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.