
ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியும் வெற்றியைப் பதிவு செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பூரில் உள்ள க்ரீன் பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 5 ரன்னிலும், மெக்கன்சி ஹென்றி 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கூப்பர் கனொலி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், லியாம் ஸ்காட் - கேப்டன் ஜேக் எட்வர்ட்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதங்களைப் பதிவு செய்தும் அசத்தினர்.
இதில் லியாம் ஸ்காட் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், ஜேக் எட்வர்ட்ஸ் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 89 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.