
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்போட்டிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், சர்வதேச மகளிர் டி20 போட்டி இடம்பெறுவது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேசமயம்,இலங்கை,இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
அந்தந்த குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பின்னர், இரண்டு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறுதியாக, தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், இரண்டு அரையிறுதியில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.