
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் குரூப் 1இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் சுற்று கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் கேஎல் ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். கோலி 26 ரன் அடித்தார்.
வழக்கம் போல் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 18 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.