
இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரானது சமீபத்தில் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 60 ரன்களையும், ரிச்சா கோஷ் 30 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதில் சமாரி அத்தபத்து 61 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 69 ரன்களையும், கவிஷா தில்ஹாரி 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.