
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் இந்தியா 9 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து 4ஆவது இடம் பிடித்த நியூஸிலாந்தை வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி இந்தியா எதிர்கொள்கிறது. தற்போதைய அணியில் அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இப்போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் ரசிகர்கள் சற்று கலக்கமாகவே காணப்படுகிறார்கள்.
ஏனெனில் ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் எதிரணிகளை தெறிக்க விடும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் அதிகமாக தோல்விகளையே சந்தித்துள்ளது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட ஐசிசி தொடரில் சந்தித்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் அந்த அணியிடம் இந்தியா தோற்றுள்ளது. இந்நிலையில் 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“4 வருடங்களுக்கு முன்பாக 2019 உலகக்கோப்பையில் இதே போல உச்சகட்ட ஃபார்மில் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றனர். மறுபுறம் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் ரேட்டை பெற்று டாப் 4 இடத்தை பிடித்தால் போதும் என்பதில் கவனம் செலுத்தினோம். அதே போலவே இம்முறையும் இந்தியா சொந்த மண்ணில் லீக் சுற்றில் டாப் இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக அரையிறுதிக்கு வந்துள்ளது.