Advertisement

நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!

2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 13, 2023 • 21:24 PM
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்!
நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது - ராஸ் டெய்லர்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 45 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் இந்தியா 9 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதைத்தொடர்ந்து 4ஆவது இடம் பிடித்த நியூஸிலாந்தை வரும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி இந்தியா எதிர்கொள்கிறது. தற்போதைய அணியில் அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இப்போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும் ரசிகர்கள் சற்று கலக்கமாகவே காணப்படுகிறார்கள்.

ஏனெனில் ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் எதிரணிகளை தெறிக்க விடும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் அதிகமாக தோல்விகளையே சந்தித்துள்ளது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட ஐசிசி தொடரில் சந்தித்த 3 நாக் அவுட் போட்டிகளிலும் அந்த அணியிடம் இந்தியா தோற்றுள்ளது. இந்நிலையில் 2019 உலகக் கோப்பை அரையிறுதி தோல்வி இந்தியாவுக்கு இம்முறையும் சற்று பதற்றத்தையும் பயத்தையும் கொடுக்கலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய அவர்,“4 வருடங்களுக்கு முன்பாக 2019 உலகக்கோப்பையில் இதே போல உச்சகட்ட ஃபார்மில் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றனர். மறுபுறம் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் ரேட்டை பெற்று டாப் 4 இடத்தை பிடித்தால் போதும் என்பதில் கவனம் செலுத்தினோம். அதே போலவே இம்முறையும் இந்தியா சொந்த மண்ணில் லீக் சுற்றில் டாப் இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக அரையிறுதிக்கு வந்துள்ளது.

ஆனால் தோற்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலைமையில் நியூசிலாந்து எப்போதுமே ஆபத்தானது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா ஒரு அணியை எதிர்கொள்வதற்கு பதற்றமடையும் என்று சொன்னால் அது நியூசிலாந்தாக இருக்கும். 2019இல் மழையால் 2 நாட்கள் அப்போட்டி நடைபெற்றது வித்தியாசமாக இருந்தது. மான்செஸ்டரில் 80% இந்திய ரசிகர்கள் இருந்த நிலையில் நியூசிலாந்துக்கு குறைவான ஆதரவே இருந்தது. அம்மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா 300 ரன்கள் அடித்ததால் அந்த இலக்கு போதாது என்று அனைவரும் நினைத்தாலும் நானும் வில்லியம்சனும் 240 – 250 ரன்கள் போதும் என்று நம்பினோம். 

அதை தொடர்ந்து போல்ட், ஹென்றி ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்த நிலையில் மார்ட்டின் கப்டில் சரியான நேரத்தில் தோனியை ரன் அவுட் செய்தார். அதே போல இம்முறையும் டாஸ் வென்று எதை செய்தாலும் முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் இந்தியா அதிகம் நம்பியோருக்கும் ரோஹித், கில், விராட் ஆகியோரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கி மிடில் ஆர்டர் மீது அழுத்தத்தை போட முயற்சிக்க வேண்டும். இந்திய பவுலர்களுக்கு எதிராக விக்கெட்டை கைவசம் வைத்திருந்தால் வெற்றி எளிதாகும்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement