
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா மற்றும் தயாளன் ஹேமலதா இருவரும் தலா 22 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 24 ரன்களையும், சாஜனா 8 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 14 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் மழை நீடித்த காரணமாக இப்போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணிக்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.