Advertisement

பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 02, 2023 • 21:15 PM
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பாஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த பாஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அணுகுமுறையின் மூலம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிக குறைந்த வித்தியாசங்களில் தோல்வியை தழுவியது. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பாஸ்பால் முறையை குறை கூறினர்.

Trending


இருப்பினும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் தொடர்ந்து பாஸ்பால் முறையில் விளையாடி மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பாஸ்பால் முறை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறது. தற்போது டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால் அதன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அதிக வெற்றிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளை வெற்றியை நோக்கி விளையாடுவதை வீரர்கள் தங்கள் பிரதானமாக கொண்டிருக்கின்றனர்.

இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணின் தோல்விக்கு பிறகு இலங்கை சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி தனது அணுகுமுறையை மாற்றி வேகமான ரன் எடுப்பில் ஈடுபட்டதும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்கு இங்கிலாந்து அணியின் புதிய அணுகுமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வருகின்ற ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 

இந்நிலையில் பாஸ்பால் குறித்து பேசிய அஸ்வின், “இந்திய கிரிக்கெட் கலாச்சாரம் இத்தகைய அணுகுமுறையை ஏற்காது. அணித் தேர்வுக்குழுவினர் வீரர்களை பாதுகாக்க மாட்டார்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை நன்றாக ஆடி வருகின்றோம் (?!). ஆனால் விரைவில் மாற்றங்களுக்கு உள்ளாகும் அணி. மாறும் காலக்கட்டத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்காது. நிச்சயம் இங்கும் அங்கும் சில பல பிரச்சினைகள் எழவே செய்யும். இந்த மாறும் காலக்கட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து போல் பாஸ்பால் அதிரடி பேட்டிங்கை கடைப்பிடிக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

வீரர்கள் இங்கிலாந்து வீரர் புரூக் போலவோ அல்லது மற்ற வீரர்கள் போலவோ வரும் பந்துகள் மீது மட்டையை வீசுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவுட் ஆகி, அதனால் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தால் என்ன ஆகும்? நாம் என்ன செய்வோம், ‘பாஸ்பால்’ முறையில் ஆடிய வீரரை தக்க வைப்போமா? அவ்வளவுதான். விளையாடும் 11 வீரர்களில் குறைந்தது 4 வீரர்களையாவது அணியை விட்டு நீக்கி விடுவோம்.

இப்படித்தான் நம் கிரிக்கெட் பண்பாடு இருந்து வந்திருக்கிறது. மற்ற அணிக்கு சரியாக வருகிறது என்பதற்காக இன்னொரு அணியின் முறையை நாம் நகலெடுக்க முடியாது. இங்கிலாந்துக்கு ஒர்க் ஆகிறது என்றால் இங்கிலாந்து நிர்வாகம் முழுதும் இந்த அணுகுமுறையை ஏற்று வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறது. அணித் தேர்வாளர்களும் இப்படி ஆட ஊக்கமளிக்கின்றனர். இவர்கள் ஏன், இங்கிலாந்து ரசிகர்களே தோற்றாலும் வென்றாலும் இந்த அணுகுமுறையை ரசித்து மகிழ்கின்றனர். ஆனால் நாம் இதைச் செய்ய முடியாது.

உலகக் கோப்பையை வெல்வது என்பது சுலபமானதல்ல. ஒரு வீரரை அணியில் வைக்கிறோம். ஒருவரை ட்ராப் செய்கிறோம் போன்றவற்றினாலெல்லாம் நாம் உலகக் கோப்பையை வென்று விட முடியாது. எல்லாம் நடந்து முடிந்ததும் பிற்பாடு யோசிப்பதில் நாம் ராஜாக்கள். ஆனால் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்த பிற்பாடு யோசித்தல் வேலைக்கு ஆகாது. முக்கியத் தொடர்களிலெல்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறோம். ஆனால் அரையிறுதி தினத்தில் போதுமான அளவுக்கு நன்றாக ஆட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement