
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் நேபாளை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் 48.5 ஓவரில் 230 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதை தொடர்ந்து இந்தியா பேட்டிங்கை துவக்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 74 ரன்களும், ஷுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் நேபாள் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக அறியப்படும் நேபாள் ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் இந்தியாவை எதிர்கொண்டது.
அதில் முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி இந்தியாவின் பந்து வீச்சுக்கு 20 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்திய ஃபீல்டர்கள் கோட்டை விட்ட கேட்ச்களை பயன்படுத்தி 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நேபாள் 49 ஓவர்கள் வரை போராடி 230 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது. அந்த வகையில் கத்துக்குட்டியாகவே இருந்தாலும் டாப் அணியான இந்தியாவுக்கு சவாலை கொடுத்த அந்த அணியை இந்திய ரசிகர்களை சமூக வலைதளங்களில் பாராட்டினர்.