இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்திற்கும், சதமடித்து அசத்திய ரிஷப் பந்த் 6ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். அதேசமயம் வங்கதேச டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10ஆம் இடத்திற்கும், விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.