
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அயர்லாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 10) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி காளமிறங்கிய அயர்லாந்து அணியில் சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாரா ஃபோர்ப்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய ரய்மெண்ட் ஹெய் 5 ரன்களிலும், ஒர்லா பிரெண்டர்காஸ்ட் 9 ரன்களிலும், லாரா டெலானி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 56 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேபி லூயிஸ் - லியா பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருடன் இணைந்து விளையாடிய லியா பாலும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டிய நிலையில், லியா பால் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேபி லூயிஸ் 92 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.