
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வங்கதேசத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடி வருகிறது.
அதன்படி சமீபத்தில் நடைபெற்று முடிந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது வரும் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு இலவச அனுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.