
இந்தியாவில் நடந்து வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்கள் முடிவடைந்ததும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதனை அடுத்து அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் நோக்கில் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் சர்வதேச டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடியாது என கூறியுள்ளது.