Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள்!

அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ்  அணி தக்கவைத்துள்ள 4 வீரர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan November 26, 2021 • 13:53 PM
IPL 2022 - Delhi Capitals to retain Rishabh Pant, Prithvi Shaw, Axar Patel, Anrich Nortje
IPL 2022 - Delhi Capitals to retain Rishabh Pant, Prithvi Shaw, Axar Patel, Anrich Nortje (Image Source: Google)
Advertisement

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன. 

Trending


பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பழைய 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். 

கடந்த மெகா ஏலத்தில் ஆர்டிஎம் என்கிற முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தன் அணியில் இருந்த வீரரை ஏலத்தில் இன்னொரு அணி தேர்வு செய்தால் அதே தொகைக்கு ஆர்டிஎம் முறையில் ஓர் அணி தேர்வு செய்துகொள்ளலாம். இப்போது, ஆர்டிஎம் நடைமுறையை நீக்கியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். இரு புதிய அணிகள் தேர்வு செய்யும் மூன்று வீரர்களில் இருவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். 

அதன்படி 8 அணிகளும் நவம்பர் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது. 8 அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு மீதமுள்ள வீரர்களில் இருந்து இரு புதிய அணிகளும் தலா மூன்று வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்தப் பணி டிசம்பர் 25-க்குள் முடிவடையவேண்டும். 

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் தொடரவுள்ளார். ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல், அன்ரிச் நோர்ட்ஜோ ஆகிய நால்வரையும் டெல்லி அணி தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. 

2020 போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயஸ் ஐயர், ஏலத்தில் பங்குபெற முடிவு செய்துள்ளார். அதனால் அவரை டெல்லி அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இரு புதிய அணிகளில் ஏதாவது ஒன்று ஸ்ரேயஸ் ஐயரை கேப்டனாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் 8 பழைய அணிகளில் 4 அணிகளில் புதிய கேப்டன்கள் நியமிக்கப்படவுள்ளதால் ஸ்ரேயஸ் ஐயர் முன்பு பல வாய்ப்புகள் உள்ளன.  2022 ஐபிஎல் போட்டிக்காகத் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement