
ஐபிஎல் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெறாத அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலாவதாக பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முதல் 10 ஓவர்களில் அந்த அணி பெரிய சிக்கலை சந்தித்தது.
4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 67 ரன்களை மட்டுமே அவர்கள் குவித்து இருந்ததால் பின் வரிசையில் வரும் வீரர்கள் எப்படி பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் களம்புகுந்து ஹெட்மயர் உடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் 15 ஓவர் வரை விக்கெட் விழாமல் பந்துகளுக்கு இணையாக ரன்களை குவித்து இருக்க அதன் பின்னர் 16-வது ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினர்.
ஒரு பக்கம் ஹெட்மயர் மிகவும் அதிரடியாக விளையாடி கொண்டிருக்க அஸ்வின் கடைசி 2 ஓவர்களில் மீதம் இருக்கும் வேளையில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்டு அவுட் என்கிற விதிமுறைப்படி முதல் நபராக இந்த முடிவை எடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். ஏனெனில் மீதமிருக்கும் இரண்டு ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் எனில் யாராவது வந்து அதிரடி காட்ட வேண்டும் என்பதனால் அஸ்வின் அவ்வாறு ஆட்டமிழந்து வெளியேறினார்.