Advertisement

ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; மீண்டும் பஞ்சாப்பை கதறவிட்ட திவேத்தியா!

ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராகுல் திவேத்தியாவின் அடுத்தடுத்த சிக்சர்கள் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 08, 2022 • 23:38 PM
IPL 2022: Rahul Tewatia loves finishing games against Punjab Kings
IPL 2022: Rahul Tewatia loves finishing games against Punjab Kings (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் விளையாடின. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் இந்த போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஜானி பேர்ஸ்டோ 8 ரன்னில் ஆட்டமிழந்தார். தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடினார். 16 ரன்னில் லிவிங்ஸ்டோனின் கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்டியா பிடித்தபோது பவுண்டரி லைனை மிதித்துவிட்டதால் அதற்கு சிக்ஸர் ஆனது.

Trending


அதன்பின்னர் அடித்து ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார் லிவிங்ஸ்டோன். தவான் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஒடீன் ஸ்மித் டக் அவுட்டானார். அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஷாருக்கான் 15 ரன்கள் மட்டுமே அடித்து ரஷீத் கானின் சுழலில் வீழ்ந்தார். கடைசி விக்கெட்டுக்கு ராகுல் சாஹரும் அர்ஷ்தீப் சிங்கும் இணைந்து 27 ரன்களை சேர்த்தனர். ராகுல் சாஹர் 22 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 10 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 190 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் மேத்யூ வேட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்த, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதையடுத்து 35 ரன்களில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியைத் தொடர்ந்தார். இதனால் குஜராத் அணி வெற்றியை எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன் ஷுப்மன் கில்லும் தனது முதல் சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால் 96 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில், ரபாடா பந்துவீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்ததுடன், சதம் அடிக்கும் வாய்ப்பையும் 4 ரன்களில் தவறவிட்டார்.

இதனால் குஜராத் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 19 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. இதில் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 27 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனால் கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்திலிருந்த ராகுல் திவேத்தியா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு அசத்தலான வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement