
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர். விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் இருவரும் அடித்தும் ஆடினர்.
15 ஓவருக்கு மேல் ருத்ரதாண்டவம் ஆடினார் டி காக். 16ஆவது ஓவரிலிருந்து சிக்ஸர் மழை பொழிந்தார் டி காக். 59 பந்தில் சதமடித்த டி காக், 19வது ஓவரில் 3 சிக்ஸர்களும், கடைசி ஓவரில் 4 பவுண்டரிகளும் விளாசினார். ராகுல் 51 பந்தில் 68 ரன்களும், டி காக் 70 பந்தில் 140 ரன்களும் குவிக்க, 20 ஓவரில் 210 ரன்களை குவித்த லக்னோ அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.