
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைடான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் இரண்டாவது பந்தே அவுட்டாகி அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தார்.
தொடக்கமே ஏமாற்றமாக அமைந்த பஞ்சாப் ரசிகர்களுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களுடன் பெவிலியன் பக்கம் திரும்பி ரசிகர்களின் சோகத்தை மேலும் அதிகப்படுத்தினார். இவர்களுக்குப்பின் வந்த மேத்தேயூ ஷார்ட் பொறுப்பாக ஆடி 36 ரன்களை சேர்த்துவிட்டு தன்னால் முடிந்ததை செய்துவிட்டு கிளம்பினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா, பனுகா ராஜபக்சாவுடன் கூட்டணி அமைத்து ஸ்கோரை முன்னேற்றினாலும் அவசரப்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டாகி 25 ரன்களில் சுருண்டார்.
இதனால் 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 109 ரன்களை சேர்த்திருந்தது. நிலைத்து ஆடுவார் என எதிர்பார்த்த பனுகா ராஜபக்சா 20 ரன்களிலும், சாம் கர்ரன் 22 ரன்களிலும் விக்கெட்டாக அணியின் ஸ்கோர் தேங்கியது. இறுதியில் ஷாருக்கான் 2 சிக்சர்கள் விளாசி அதே வேகத்தில் நடையைக்கட்டினார்.