
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையொல் இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ரன்கள் ஏதுமின்றி எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.