
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ஜடேஜா கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து விலக நினைத்தார். கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதால் ஜடேஜா மீது கடும் விமர்சனம் எழுந்தது.
ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை எப்படி கையாள்வது என்று ஊட்டி விட முடியாது என தோனி வெளிப்படையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு தோனி வந்தார். இதனால் தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகினார். அதன் பிறகு சிஎஸ்கே அணியிலிருந்து விலகவும் ஜடேஜா முடிவெடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் சிஎஸ்கே தொடர்பான பழைய பதிவுகளை எல்லாம் ஜடேஜா அழித்தார். இதனால் அவர் நடப்பாண்டு விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.