
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் விளையாடின.
ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல்லும், ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும் ஆடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடுகிறார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடிய கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால் இருவருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் டுப்ளெசிஸ் 55 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். லோம்ரோர்(1) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) சொதப்பினர்.