
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பவர் பிளேவில் 37 ரன்கள் எடுத்து, 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 79 ரன்கள் எடுத்து, 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 11.3 ஓவரில் 87 ரன்கள் கிடைத்தது. ஆனால் பத்து ஓவர்களுக்குப் பிறகு சரியாக விளையாடாமல் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை என்று நிலைமையைக் கொண்டு வந்து, இறுதி ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் தாழ்வான உயரத்தில் வரும்படி இருந்தது. ஆனால் இலக்கை நோக்கி விக்கட்டுகளை கையில் வைத்திருந்த ராஜஸ்தான் அணி தைரியமாக பத்து ஓவர்கள் கழித்து விளையாடி இருந்தால் ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி விளையாடாததால் அதீத நம்பிக்கையால் ராஜஸ்தான் அணி தோற்றுப் போனது.