
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டு 24 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதேசமயம் மறுமுனையில் ஜோஸ் பட்லர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 77 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.