Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 02, 2024 • 23:15 PM
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவிலுள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.  இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் குயின்டன் டி காக் வழக்கம் போல் அதிரடியாக தொடங்க, மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த கேஎல் ராகுல் 2 சிக்சர்களை விளாசிய நிலையில் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய உள்ளூர் வீரரான தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.  இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார்.

Trending


அவருக்கு துணையாக மார்கஸ் ஸ்டொய்னிஸும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களை விளாசிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் மயங்க் தாகரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 81 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.  அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் இப்போட்டியில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதிலும் குறிப்பாக ரீஸ் டாப்லி ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களையும், முகமது சிராஜின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களையும் விளாசி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். இதன்மூலம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 40 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் முதலில் நிதானம் காட்டிய விராட் கோலி, அதன்பின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் இப்போட்டியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் எடுத்த நிலையில் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து பந்துவீச வந்த மயங்க் யாதவ் பந்துவீச்சில் சிங்கிள் எடுக்க முயற்சித்த ஃபாஃப் டூ பிளெசிஸும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதே ஓவரின் நான்காவது பந்தில் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை பறிகொடுத்து ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஆர்சிபி ரசிகர்கள் மீள்வதற்குள் 9 ரன்களை எடுத்திருந்த கேமரூன் க்ரீன், மயங்க் யாதவ் வீசிய அபாரமான பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். இதனால் ஆர்சிபி அணி 58 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ராஜத் பட்டிதார் - அனுஜ் ராவத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

இதில் அனுஜ் ராவத் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ராஜத் பட்டிதாரும் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மஹிபால் லாம்ரோர் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 33 ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்களுக்கும், மயங்க் தாகர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த மஹிபால் லாம்ரோரும் ஆட்டமிழந்தார். 

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement