
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற குயின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததைப் போன்று இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய அணியின் துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரனும் தனது முதல் பந்திலேயே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்களை எடுத்து குல்தீப் யாதவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 10 ரன்களுக்கும், குர்னால் பாண்டியா 03 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.