
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதாரும் ரன்கள் ஏதுமின்றி முஸ்தஃபிசூர் ரஹ்மானின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை சிறிதுநேரம் தடுத்து நிறுத்தினார். பின் 21 ரன்களில் விராட் கோலியும், 18 ரன்களில் கேமரூன் க்ரீனும் அடுத்தடுத்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.