Advertisement

ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 06, 2024 • 23:11 PM
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய பட்லர், அதிரடியில் மிரட்டிய சாம்சன்; ஆர்சிபியை வீழ்த்தியது ராஜஸ்தான் (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். முதலில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இப்போட்டியில் 100 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

Trending


அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் விராட் கோலி ஒருமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் சௌரவ் சௌகானும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 67 பந்துகளில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்து அசத்திய முதல் வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பட்லருடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக நடப்பு சீசனில் இதுவரை சோபிக்காமல் இருந்த ஜோஸ் பட்லரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைந்து அணியின் வெற்றியையும் ஏறத்தாழ உறுதிசெய்திருந்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 69 ரன்களைச் சேர்த்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் யாஷ் தயாளின் சிறப்பான் கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் களமிறங்கி இரண்டாவது பந்திலேயே பவுண்டரியை விளாசிய நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுத்து யாஷ் தயாள் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜுரெல் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரீஸ் டாப்லி பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் இப்போட்டியில் சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

அதன்படி இப்போட்டியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஐபிஎல் தொடரில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 100 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement