Advertisement

ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 31, 2024 • 23:29 PM
ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ட
ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது ட (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகபட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் முதல் இரண்டு ஓவர்கள் பொறுமை காத்த நிலையில், மூன்றாவது ஓவரிலிருந்து தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் தனது 62ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். 

Trending


அவரைத் தொடர்ந்து மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் - மிட்செல் மார்ஷ் இணையும் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொண்டனர். இதில் மிட்செல் மார்ஷ் 18 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என மதீஷா பதிரனாவின் யார்கருக்கு அடுத்தடுத்து க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் தனது அரைசதத்தை கடந்த அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வந்த ரச்சின் ரவீந்திரா 12 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த அஜிங்கியா ரஹானே - டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேரில் மிட்செல் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் என 34 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானேவும் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய சமீர் ரிஸ்வியும் சந்தித்த முதல் பந்திலேயே முகேஷ் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷிவம் தூபே 18 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரி விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களை விளாச, கடைசி இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 46 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதில் இறுதிவரை அதிரடியாக விளையாடிய மகேந்திர சிங் தோனி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 37 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களையும் சேர்த்த போதும் சிஎஸ்கே அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே அடித்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், கலீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement