
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் சஹா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 ரன்களில் ஷுப்மன் கில்லும் நடையைக் கட்டினார். பின்னர் நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷனும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஷாருக் கான் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் மில்லர் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டர் ஷாருக் கானும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ராகுல் திவேத்தியா 30 ரன்களையும், ரஷித் கான் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.