
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த வில் ஜேக்ஸ் - ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியாது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜத் பட்டிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜத் பட்டிதாரும், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் எடுத்த நிலையில் வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் - மஹிபால் லாம்ரோர் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் லாம்ரோர் 13 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்தி ரன்கள் ஏதுமின்றியும் என கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.