
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ஷுப்மன் கில் 50 பந்துகளில் தனது 4ஆவது சதத்தை பதிவுசெய்ய, மறுபக்கம் சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் சாய் சுதர்ஷன் 103 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 104 ரன்களுக்கும் என அடுத்தடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
இறுதி பந்தில் ஷாருக் கானும் 2 ரன்களுக்கு அவுட்டாக குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.