
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிக மோசமான தொடராக மாறி வருகிறது. அந்தவகையில் அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெது புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பந்துவீச்சு துறைதான் இருந்து வருகிறது.
எனெனெனில் நேற்றைய போட்டியில் கூட 196 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி அணி நிர்ணயிக்க, அதனை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 15.3 ஓவர்களிலேயே எட்டியது. இதில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இப்போட்டி மட்டுமின்றி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
குறிப்பாக இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திவரும் முகமது சிராஜிக்கு இந்த ஐபிஎல் தொடரானது மறக்க கூடிய ஒரு தொடராக மாறி வருகிறது. ஏனெனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ், நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பந்துவீச்சில் 10 எக்கனாமி என்ற அடிப்படையில் இதுவரை 229 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால் அவரது டி20 உலகக்கோப்பை தொடருக்கான வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.