
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் இப்போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 72 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.