
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சாp கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பெயரை பதிவுசெய்திருந்தனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.