
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் அணியில் மஹீஷ் தீக்ஷனா, யுத்வீர் சிங் ஆகியோரும், குஜராத் டைட்டன்ஸ் அணியில் அறிமுக வீரர் கரீம் ஜானத்தும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.