
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேர்வுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதற்கேற்ற வகையில் நடப்பு ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி 5 ஆண்டுகளுக்கு மேலாகும் வீரர்களை அன்கேப்ட் வீரர்களாக ஒப்பந்தம் செய்யலாம் என்ற விதிமுறையையும் பிசிசிஐ அறிவித்து சிஸ்கே ரசிகர்களை கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து தோனி, இம்முறை அன்கேப்ட் வீரராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.