ஐபிஎல் 2025: இங்கிலிஸ், பிரியான்ஷ் அதிரடியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்த்திருந்த ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய திலக் வர்மா ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 17 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தானர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த நமன்தீரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இறுதில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களைச் சேர்த்திருந்த நமந்தீர் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜயகுமார் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேலும் இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களை எடுத்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸும் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியான்ஸ் அணியை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now