
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லார் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுனில் நரைன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் குர்பாஸுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் 30 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரே ரஸல் அரைசதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார்.