ஐபிஎல் 2025: சதமடித்து அசத்திய கேஎல் ராகுல்; டைட்டன்ஸுக்கு 200 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேஎல் ராகுலுடன் இணைந்த அபிஷேக் போரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அபிஷேக் போரல் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து ஒருபக்கம் கேஎல் ராகுல் சதத்தை நோக்கி விளையாடி வந்த நிலையில் மறுபக்கம் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now