ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றியைத் தொடரும் மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் சான்ட்னர் மற்றும் விக்னேஷ் புதூர் ஆகியோருக்கு பதிலாக கரண் சர்மா மற்றும் கார்பின் போஷ் ஆகியோர் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
Also Read
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அடுத்தடுத்து சிக்ஸர்களுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரியான் ரிக்கெல்டன் 25 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதன் காரணமாக, இருவரும் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது.
அதன்பின் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிக்கெல்டன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்களைச் சேர்த்த கையோடு வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 6 ரன்களுக்கும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பதிவுசெய்த கையோடு 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 54 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் நமன் தீர் மற்றும் கார்பின் போஷ் இணையும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கார்பின் போஷ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த நமன் தீர் 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஐடன் மார்க்ரம் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக தொடங்கிய நிலையில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த கையோடு நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் வழக்கம் போல் இந்த போட்டியிலும் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் மில்லர் 24 ரன்னிலும், அவேஷ் கன் ரன்கள் ஏதுமின்றியும், அப்துல் சமத் 2 ரன்னிலும் என அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் ரவி பிஷ்னோய் தனது பங்கிற்கு இரண்டு சிக்ஸர்களை விளாசி 13 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now